Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் திடீரென தீக்குளிக்க முயன்ற ஏட்டுவின் கணவர் கைது

பிப்ரவரி 11, 2020 07:56

திருச்சி: திருச்சியில் திடீரென கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஏட்டு கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தந்தையிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மனு கொடுக்க வருபவர்களை கடும் சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் மீது தாடியுடன் ஒருவர் ஏறி உள்ளே குதித்தார். அவரது கையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் எழுதும் இடத்திற்கு சென்ற அவர்  திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறவே  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபர் பையுடன் கொண்டு வந்திருந்த புகார் மனு மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை பறித்துவிட்டு  அவர் மீது தண்ணீர் ஊற்றி குளிக்க செய்து காப்பாற்றினர். போலீசார் ஏன்  இந்த முடிவு எடுத்தீர்கள் என்று கேட்டபோது தந்தை 2-ம் திருமணம் செய்து கொண்டு சொத்தை பிரித்து கொடுக்காமல் தன்மீது போலீசில் பொய்புகாரும் கொடுத்ததாக கூறினார்.

எனவே தந்தையிடம் இருந்து தாத்தா சொத்தை முறைப்படி பேரனுக்கு தரவேண்டும் என்ற அடிப்படையில் முறையிட வந்ததாக கூறினார். மேலும் தந்தையிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்

தீக்குளிக்க முயன்றவர் பெயர் கே.மணிகண்டன்(வயது 35). திருச்சி மாவட்டம் துவாக்குடிமலை (தெற்கு) அண்ணாநகரை சேர்ந்தவர். இவர் சேலத்தில் மத்திய அரசின் நிறுவனமான உருக்காலையில் ஒப்பந்தபணியில் டெக்னீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சேலம் ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இது தொடர்பாக சேலத்தில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரோ என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் இப்படி நடந்து கொண்டது தெரியாது என்றார்.

பின்னர்  தீக்குளிக்க முயன்றது சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து கைது செய்ய கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் மணிகண்டன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்